Tuesday, January 17, 2012

ஒரு அகாலத்தின் ஆரம்பமும் முடிவும்

நீள் உறக்கம் களைத்து
விழிப்படைந்த இவ்வேளையில்
பண்பலையின் மெல்லியபாடல்
அருவமாய் பரவுகிறது
அடர்பனியின் குளிருடன்   

நகரும் வரிகளோடிய
நெடிய பாலையில்
கண்ணில் கானல் நீர் மின்ன நெளியும்
தகிக்கும் தனிமை அரவத்தை
கழுகென  கொத்தித் தின்கிறது
கிளைஇலைகளில் மறைந்து பேசும்
பறவைகளின் பேரொலி

ஜன்னலில் விரியும் ஆதிமரம்
அசைவுகளை நிறுத்தி
உறைந்த கணத்தில் நிகழ்கிறது
ஒரு அகாலத்தின் ஆரம்பம்

நடுங்கி அலறிய
கைப்பேசி அலாரத்தில்
சட்டென உயிர்த்து
கவிகிறது காலம்
என்மேல்
கட்டமைத்துக்கொண்டிருக்கும்
தன்வரலாற்றின்
அத்துனை சுமைகளுடனும். 
 

No comments: