Saturday, February 26, 2011

கருக்கல் வெளுக்கிறது




மதிய வெய்யிலில் 

மடை மாற்றச் சென்றுவிட்டு திரும்புகையில் 
சட்டெனக் கருத்து நனைக்கிறது இடியும் மின்னலும்

சித்தப்பா திருமணத்தில் சண்டையாகி
பேச்சுவார்த்தை நின்றுவிட்ட
மாமாவின் வீட்டருகே தயங்கியபடி 
மழையில் நனைந்து ஒதுங்க 
மிரண்டு குரைக்கிறது புதிய அல்சேசன் நாய்க்குட்டி

வெளிவந்த முறைப்பெண் முத்தழகு
உள்ளோடி குடையுடன் வந்து 
வாங்க மாமாவென கூட்டிப் போகிறாள் 
வற்புறுத்தி வீட்டுக்குள்

என்ன மாப்ளே வேத்தாள் மாதிரி வெளியவே நின்னுட்டீங்க
எளவு இந்த வானம் மாதிரிதானே மனசும்
மழையும் கோபமும் சட்டுன்னு வந்துட்டாலும் கஷ்டம்
வராமயே இருந்தாலுங் கஷ்டம்
சொல்லியபடியே எனக்குப் பிடித்த கறுப்புக் காப்பி போட்டு  
சொம்பில் நீட்டுகிறாள் அத்தை

கொஞ்ச நேரம் மழையில நின்னா
உங்க தலைகுள்ள  இருக்கிறது கரைஞ்சிடும் மாப்ளே எனக் 
கேலியுடன் தத்துவமும் உதிர்த்துச் சிரிக்கிறார் மாமா
உதடு கடித்துச் சிரிப்பை அடக்கியபடி 
ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டிருக்கிறாள் முத்தழகு
  
உறவுகளின் கதகதப்பில் குளிர் காய்கிறது உடலும் மனமும்
உள்ளும் புறமும் சூழ்ந்திருந்த கருக்கல் 
வெளுக்கிறது மெல்லமெல்ல.


4 comments:

Raja said...

நெகிழ்வான கவிதை...உணர்வும் வார்த்தைகளும் பின்னி பிணைந்து , ஊறற்ற ஓட்டத்துடன் அமைந்திருக்கிறது...வாழ்த்துக்கள் கோநா...

துரோணா said...

எளவு இந்த வானம் மாதிரிதானே மனசும்
மழையும் கோபமும் சட்டுன்னு வந்துட்டாலும் கஷ்டம்
வராமயே இருந்தாலுங் கஷ்டம்\\

பொருள் பொதிந்த வரிகள்.....
வாழ்த்துக்கள் கோநா

குறையொன்றுமில்லை. said...

நெகிழ்வான கவிதை. வாழ்த்துக்கள்.

கோநா said...

@ராஜா

@துரோணா

@லக்ஷ்மி

-அனைவருக்கும் மிக்க நன்றி.